அகிலத்திரட்டு அம்மானை

     

அகிலம் கல்விச்சாலை

       அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள்நூல்

 பட்டயப் படிப்பு

  முதல் பருவம்(SEMESTER

Day 1

அகிலத்திரட்டு அம்மானை

 காப்பு


ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணிக்

காரணம் போல் செய்தகதை கட்டுரைக்க- பூரணமாய்

ஆராய்ந்து பாட அடியேன் சொல் தமிழ்க்குதவி

நாராயணர் பாதம் நாவினில்

பாண்டவர் தமக்காய்த் தோன்றிப் பகைதனை முடித்து மாயோன்

வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலை யேகிச்

சான்றவர் தமக்கா யிந்த தரணியில் வந்த ஞாயம்

ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எழுத லுற்றேன்

சிவமே சிவமே சிவமணியே தெய்வ முதலே சிதம்பரமே

தவமே  தவமே தவக்கொழுந்தே தாண்டவ சங்காராதமியே- எங்களுட

பவமே பவமே பல நாளுஞ் செய்த பவமறுத்துன்

அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்

சிவசிவ சிவசிவா அரகர அரகரா

அலையிலே துயில் ஆதிவராவர்

ஆயிரத்தெட்டாண்டினி லோர்பிள்ளை

சிலையிலே பொன்மகர வயிற்றினுள்

செல்லப்பெற்றுத் திருச்சம் பதிதனில்

முலையிலே மகரப்பாலை உமிழ்ந்துபின்

உற்றதெச்சண மீதில் இருந்துதான்

உலகில் சோதனை பார்த்தவர் வைந்தரின்

உவமை சொல்ல உகதர்ம மாகுமே

திருமொழி சீதையாட்குச் சிவதலம் புகழ எங்கும்

ஒரு பிள்ளை உருவாய்த் தோன்றி உகபர சோதனைகள் பார்த்துத் திருமுடி சூடித் தர்மச்சீமையில் செங்கோ லேந்தி

ஒரு மொழி யதற்குள் ளாண்ட உவமையை உரைக்க லுற்றார்


விளக்கம்:-


அய்யா நாராயணர் கனிவாயால்  எடுத்துக் கொடுத்த "ஏரணியும்"என்ற சீரை தொடக்கமாக கொண்டு அகிலத்திரட்டு அம்மானையை  அரிகோபாலன் சீசர் எழுதியுள்ளார். "ஏர்" என்பதற்கு "நன்மை", "அழகுஎன்பது பொருள் ஆகும். ஏரணியும் என்றால் நன்மை செய்வதையே  தனது இயல்பாக கொண்டிருக்கிறவர் என்றும்,அழகு, ஐஸ்வர்யம், பொழிவு, மங்களம் போன்ற அனைத்து விதமான நன்மைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறவர் என்றும் பொருள் ஆகும். இறைவழி நடக்கின்ற மேலும்  கலியில் வாழுகின்ற மக்களின் மனதைப் பண்படுத்தி ஜீவன்களுக்கு மோட்சம் என்னும் அழகினைக் கொடுத்து அவர்களை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொள்கின்றவர் அய்யா. 

இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் இந்த கலியுலகில்  கலி என்ற மாய்கைக்குள்  சிக்குண்டு இருப்பதால் அந்த மாய்கையிலிருந்து மக்களைத் காப்பாற்றி நல்லோரைத் தேர்ந்து எடுத்துத் தர்மயுக வாழ்வுக் கொடுப்பதற்காக எம்பெருமான் அவரித்த காரணங்களை இங்கு எடுத்துரைக்கிறார். மேலும் ஆதிநாராயணர் ஐவராகிய பஞ்சபாண்டவர்களை காப்பாற்றுவதற்காக கிருஷ்ணராக பிறந்து மகாபாரத போரை முடித்த பெருமாள் பூமியில் கலியன் தோன்றியதை அறிந்து வருத்தம் மிகக் கொண்டு திருக்கயிலாயம் சென்று சான்றோர் மக்களாகிய அய்யாவின் பிள்ளைகளை கலி என்ற மாய்கையில் இருந்து பாதுகாக்கவென்று சிவபெருமானிடம் ஆலோசனைக் கேட்க சென்றார்.

 

 

கைலையில் எப்போதும் தவநிலையிலிருந்து அருளும் எம்பெருமானாகியச் சிவன் முன்னிலையில் நின்று நாராயண போற்றுகிறார். உயிர்களை எல்லாம் படைத்தப் பரம்பொருளையே தேவர்க்கெல்லாம் முதன்மையானவரே! வெள்ளியங்கிரியில் வீற்றிருப்பவரே! அவற்றுக்கெல்லாம் தகப்பனே! தாண்டவக் கூத்துத்தாடி தவறுகளை  அழிக்கும் சக்தியைப் பெற்றவரே! சிவபெருமானே! எங்கள் பாவங்களை மன்னித்து உம்முடையப் பாதுகாப்பிலேயே வைத்து நல்வழிப்படுத்தி வழிநடத்தும் அம்மையே அப்பா! கருணை உள்ளம் கொண்டவரே! சிவ பரம் பொருளான நாராயண பரம் பொருளே! [அரியும், சிவனும் ஒன்றே] என்று போற்றி நின்ற நாராயணரை சிவனார், கண் திறந்துப் பார்த்து , ஏதுகாண் அச்சுதரே! என்னைத் துதி செய்தக் காரணம் என்ன என்றுக் கேட்க அய்யா நாராயணர் திருவாய் மலர்ந்து உரைப்பார், படைக்கும் பரம்பொருளே!, பூமியில் கலி நீசனின் கொடுமையால் சான்றோர் மக்கள் துயரப்படுகிறார்கள்.

 

 என்னை நினைத்து அபயம் இட்டு உருகுகிறார்கள். நான் அவர்களுக்குத் துணைப் புரிய தாங்கள் உதவ வேண்டும் என்று உரைத்தார். இவ்வாறுச் சொன்ன வார்த்தையைக் கேட்ட சிவபெருமானை மனமுருக மொழிவார், நீயே பூமியில் கலியனின் கொடுமைகளை ஒழிக்க வைகுண்டராக அவதாரம் எடுத்து பிறந்து வரவேண்டும். நான் உற்ற துணையாய் இருந்து அருள் புரிவேன் என்று ஈஸ்வரர் திரு வாய்மொழிந்தார்.

 

ஈரேழு பதிநான்கு லோகத்தையும் படைத்து, அதில் எண்பத்தி நான்கு லட்சம் வகையான சீவராசிகளையும் படைத்து, காத்து, அருளுகின்ற பரம் பொருளான ஆதி நாராயணரே இந்த கலியுகத்தில் மனுப் போல் அவதரித்து தவசு பண்ணி, நடத்திய லீலைகளை கதையாக சொல்லவும், உலக தோற்றம் முதல் இறுதிவரையுள்ள அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து பாடவும், தமிழ் மொழியை தந்து, அந்த வார்த்தைகள் இறை மொழியாக அமைய நாராயணரின் கமல திருபாதமே தனது நாவில் இருக்க வேண்டும் என வேண்டி ,

 அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க வேண்டி யுகாயுகங்கள் தோறும் அவதாரம் எடுத்து வருகின்ற அய்யா நாராயணர் துவாபரயுகத்தில் கண்ணனாக அவதரித்து தர்மத்தை காத்தார்.


 பஞ்ச பாண்டவர்கள் தர்மத்தின் வழியில் நடந்ததால்  அவர்களுக்கு துணையாக நின்று, குருசேத்திரத்தில் நடந்த மகாபாரத போரில் அதர்மம் வழிநின்ற துரியோதனனின்  படைகளை தோற்கடித்து, பாண்டவர்களுக்கு வெற்றியை கொடுத்து, அவர்களுக்கு உரிமையுள்ள குருநாட்டையும் மீட்டுக்கொடுத்துதர்மத்தை நிலை நிறுத்தி இருக்கும் போது, முன் முடிந்த ஆறு யுகங்களிலும் பிறந்த அரக்கனின் மொத்த தீயவைகளையும்  ஒன்றாக சேர்த்தாலும் எட்டில் ஒரு பங்கு கூட இல்லாத அளவுக்கு கொடிய மாபாதகனாய் கலியன் வீறுக் கொண்டு வந்த செய்தியை அறிந்து கயிலைக்கு சென்று, அங்கிருந்து கலியை அழிப்பதற்கான காரியங்களையும், கலியுகத்தில் தாம் அவதாரம் நிகழ்த்துவதற்கான காரண காரியங்களையும் செய்துவிட்டுசான்றோர்களை காப்பதற்காக பூமியில் அவதரித்த நியாய தர்ம முறையையும் ஆண்டவனாகிய அந்த அவதார நாயகனே கருணை உள்ளத்தோடு எனது சிந்தைக்குள்ளிருந்து எடுத்துச் சொல்ல நான் இந்த "அகிலத்திரட்டை" அம்மானை வடிவில் எழுதுகிறேன் என்கிறார் அரிகோபாலன் சீசர்.

 

தவமாய் இருந்து சங்கல்பம் (நினைத்தல்) செய்வதன் மூலமாகவும் இந்த பரந்தவிரிந்த பிரபஞ்சத்தை இயக்குகின்ற இறைவா! நாங்கள் பலநாளும் அதாவது இதுவரை பிறந்துள்ள பிறவிகளில் எல்லாம்  செய்துள்ள பாவங்கள் எல்லாம் அழித்து, எங்களை தூய்மையாக்கி, பிறப்பு இறப்பில்லாத, நோய் நொம்பலம் இல்லாத, துன்ப துயர் இல்லாத, பசி பட்டினி இல்லாத, வளர்வு தேய்வு இல்லாத, இரவு பகலில்லாத என்றென்றும்  நிலைத்திருக்கின்ற நித்திய பரமானந்தம் என்கின்ற முக்தியை தருகின்ற தருமயுக வாழ்வை தருவாய் என வேண்டி, நமது  பாவத்தை போக்கும் நாமமான அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா என்ற கலியழிக்கும் மகா மந்திரத்தை சொல்லி அபயமிடுகிறார்.

 

        நாம் செய்கின்ற பாவத்தினாலே நமக்கு  மீண்டும் மீண்டும் பிறவி ஏற்பட்டு துன்பப்பட வேண்டியுள்ளது. இதைத்தான் சிவ காண்ட அதிகாரப் பத்திரத்தில் அய்யா "உங்களுடைய பாவம்  உயிர் வதையாய் இருக்குதடா" என்கிறார். நாம் செய்த மற்றும்  செய்கின்ற பாவத்தின் காரணமாக உண்டான கர்மவினையின் காரணமாகவே   நாம்(உயிர்)  உடலெடுத்து பிறந்து வதைப்படுகிறோம். நமக்கு ஏற்படுகிற துன்பங்கள் அனைத்துக்கும் நாம் மனதாலும், வாக்கினாலும்(சொல்), காயத்தாலும்(உடலால்) செய்கின்ற பாவங்கள் தான் காரணமேயன்றி பிறர் யாரும் இல்லை. மனதளவில்  நினைக்கின்ற  தப்பான செயலுக்கு கூட பாவம் ஏற்படுவதால் தான் அய்யா நம்மை நல்ல நினைவோடு இருக்க சொல்கிறார்.(நல்ல நினைவோர்க்கு நாள் எத்தனை ஆனாலும் பொல்லாது வராது புவிமீதில் வாழ்ந்திருப்பார் ---- அருள்நூல்).

 

சிவமே சிவமே சிவமணியே தெய்வ முதலே சிதம்பரமே

தவமே  தவமே தவக்கொழுந்தே தாண்டவ சங்காராதமியே- எங்களுட

 

 

அதாவது மங்கலம் புரிகின்ற, நன்மை செய்கின்ற, செம்மையாக(சிறப்பு) இருக்கின்ற, முக்தி தருகின்ற பரிபூரணமாக வீற்றிருக்கின்ற, தூய அறிவுருவாக இருக்கின்ற இறைவா  கடவுளே, சிவ என்ற நாமத்தைக் கொண்ட மணியே, அக்ஞான இருளகற்றும் அருள் ஒளியே, ஒளித்தோன்றும் இருப்பிடமே, ஒளியாகவும் நாதமாகவும் வியாபிக்கும் இறைவா,

 

தெய்வங்களுக்கு எல்லாம் முதலாய் சிதம்பரத்தில் இருக்கும்  இறைவா, நீயே தவமாக(இறைவனாக) இருந்து கொண்டு, சீவர்களின்  உறுதியான பக்தியினால் ஒரு புத்தியாகி பற்றிப் பிடிக்கின்ற தவத்தின் பயனாக கிடைக்கின்ற  ஈடுயிணையற்ற உயர்ந்த  பொருளாகவும்  இருந்து, பிரபஞ்சம் இயங்கும் பொருட்டும், உயிர்களின் நன்மைக்காகவும் திருநடனம் புரியும்  இறைவா!

 

பவமே பவமே பல நாளுஞ் செய்த பவம றுத்துன்

அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்

சிவசிவ சிவசிவா அரகர அரகரா

 

நாம் செய்கின்ற பாவங்களை எல்லாம் அனுபவித்து கழித்த பின்பே இறைவனை அடைய முடியும் என்றால் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் முடியாது. இதனால் தான் இறைவன் தன்னுடைய அருள்பெரும் கருணையால் நமது பாவங்களை போக்கி தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான்.

 

நாம் மனதார திருந்தி செய்த பாவத்தை போக்க வேண்டி அய்யாவை சரணடையும் போது அவர் தாயுள்ளத்தோடு கர்மவினையை போக்கி தர்மயுக வாழ்வை கொடுக்கிறார். இதைத்தான் அய்யா அருள்நூலில் "கற்பமூலி உங்களுக்கு கர்மவினை தீர்க்கும் மூலி" என்கிறார். அய்யா நம்மை அவருடைய அகத்தில் வைத்து முத்தி கொடுப்பதற்கு, நாம் எப்போதும் அய்யாவை அகத்தில் வைத்து நல்வழி நடக்க வேண்டும். இவ்வாறு நாம் எப்போதும் இறைவனை அகத்தில் வைத்து துதிக்கின்ற போது, நாம் செய்த பாவவினைகளை நாம் செய்த பாவவினைகளை மாற்றி நம்மைக் காத்துக் கொள்வார்.


அலையிலே துயில் ஆதிவராவர்

ஆயிரத்தெட்டாண்டினி லோர்பிள்ளை

ஆயிரத்தெட்டாண்டினில் லோர்பிள்ளை

சிலையிலே பொன்மகர வயிற்றினுள்

செல்லப்பெற்றுத் திருச்சம் பதிதனில்

முலையிலே மகரப்பாலை உமிழ்ந்துபின்

உற்ற தெட்சணம் மீதில் இருந்துதான்

உலகில் சோதனை பார்த்தவர்

வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே"

 

     பூவுலகில் கலியனுடைய வருகையால் நீதங்கள் குன்றி தர்மம் தலை கவிழ்ந்து மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார்கள். ஏற்கனவே பூவுலகில் பிறவி செய்யப்பட்ட சான்றோர்கள் கலியனுடைய கொடுமையால் மிகுந்த இன்னலுக்கு உள்ளாயினர். சான்றோர்களுடைய துன்பத்தை பொறுக்க முடியாமல் அலையிலே துயில்கின்ற ஆதிநாராயணர், பூவுலகில் வைகுண்ட அவதாரத்தை நிகழ்த்த திருவுளம் கொண்டார். எனவே மகாலெட்சுமி அன்னையிடம் "மாதே இந்த கலியுகத்தை முடிக்க உன்னுடைய வயிற்றில் வைகுண்ட மகனை பிறவி செய்ய வேண்டும், எனவே நீ திருச்செந்தூர் கடலில் மகர சிலையாக வளர்ந்து இரு, தருணம் வரும்போது அவதரிக்க வருவேன் என கூறி அனுப்பினார். அதன்படி ஆயிரத்து எட்டாம் ஆண்டு மகரமாக சமைந்திருக்க கூடிய அன்னை லெட்சுமியிடம் சென்று, அங்கு தானே ஒரு குழந்தையாக வைகுண்ட மாமணி என்னும் நாமத்தில் அவதாரம் எடுத்தார்.

      

      அவதாரம் நிகழ்த்திய பின்பு தாமே தந்தையாகவும்(நாராயணர்) மகனாகவும்(வைகுண்டர்) இருந்து இவ்வுலகில் தர்மத்தினை நிலைநிறுத்தும் பொருட்டு தாம் நிகழ்த்த போகும் அவதார லீலைகளையும்தர்மத்தின் படி மக்கள் வாழ்ந்து இக்கலியிலிருந்து மக்கள் கடைந்தேறும் பொருட்டு நடத்தும் வளமைகளையும் அருள் உபதேசம் (விஞ்சை) என்னும்  அமிர்தபாலாக உலகோர் அறியும்படி வெளிப்படுத்தினார்.

 

"உற்ற தெட்சணம் மீதில் இருந்துதான்

உலகில் சோதனை பார்த்தவர்"

 

    இப்படி விஞ்சைகளை வெளிப்படுத்திய பகவான், அதன்பிறகு முருகப்பெருமானாகவும் வைகுண்ட பரம்பொருளாகவும் நின்று முருகப்பெருமான் மற்றும் ஈரேழு பதினாலு லோகங்களில் வாழ்கின்ற தேவர்களுக்கும் சட்டம் கூறி, தாம் தவம் இருப்பதற்காக தகுதியும் சிறப்பும் பொருந்திய தெட்சணம் (உற்ற தெட்சணம்) நோக்கி வருகிறார். தெட்சணம் வந்த அய்யா, சுவாமி தோப்பில் ஆறு ஆண்டுகள் தவமாக இருந்து (தவமாகிய இறைவன் தன் தவ தத்துவத்தை காண்பித்த அற்புதம்) பின் மக்களுடைய நோய் நொம்பலங்களை தண்ணீர் மண்ணால் தீர்த்து, இந்த உகத்தில் நல்லோரை தெரிந்தெடுப்பதற்காகவும், பொல்லாத பேரை நரகத்தில் தள்ளவும், தான் கலிமன்னனுடைய சோதனைக்கு ஆட்பட்டு வென்றும், தெட்சணத்தில் இருந்து  உயிர்களை உக சோதனை பார்த்து கலியை வென்றார்.

 

"வைந்தரின் உவமை சொல்ல உகதர்மமாகுமே"

 

இப்படி எப்போது எல்லாம் இந்த யுகம் தர்மம் குன்றி, அதர்மம் மேலோங்கி இருக்கும் போது இந்த தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்த நம் அய்யா, பல அவதார அற்புதங்களையும், மகிமைகளையும் லீலைகளாக புரிந்தார். இவ்வாறு வைகுண்டமாக இருந்து புரிந்த அற்புதங்களை பெருமைகளை பாடி, துதித்து,போற்றி அனைவருக்கும் எடுத்து சொல்வதே இந்த யுகத்தினுடைய மிக பெரிய தர்மம் ஆகும்.

    ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதங்களில் தர்மம் செய்து இறைவனை அடைந்த அன்புக்குடி கொண்ட மக்கள் இவ்வுகத்தில் நாராயணருடைய அவதார மகிமைகளை (உவமை) எடுத்து சொல்ல சொல்ல இந்த கலி நொடிந்து தர்மம் நிலைபெற்று நாமும் அய்யாவினுடைய அன்பு பாத்திரங்களாகி இறைவனை அடைவோம்.




அகிலம் கல்விச் சாலை மேற்கொள்ளும் பணிகள்:

  1. அகிலத்திரட்டு  மற்றும் அருள் நூல் பாடம் நடத்துதல்
  2. அகிலத்திரட்டு வாசிப்பு பயிற்சி அளித்தல் 
  3. பதி, தாங்கல்களில் அறப்பாடச்சாலை நடத்துதல்
  4. அகிலத்திரட்டு பாராயணப் பயிற்சி வழங்குதல்
  5. நன்னெறி வகுப்புகள் நடத்துதல்
  6. தொழில்சார் பயிற்சி அளித்தல் மற்றும் மொழியறிவு வளர்த்தல்


Ø வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவும்நேரடியாகவும் வழங்கப்படுகிறது.


தொடர்புக் கொள்ள வேண்டிய முகவரி:

 

14/14-1, மணலிவிளை, மண்டைக்காடு அஞ்சல்,

கன்னியாகுமரி மாவட்டம்-629252.

வாட்ஸ் அப் எண்:9489655691

வாட்ஸ் அப் குழுவின் பெயர்: அகிலம் அறிவோம்

தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி: 9486880072,9489655691



Comments